வெட்சி 2015 ஆம் ஆண்டு அச்சிதழாகத் தொடங்கப்பட்டு படைப்பிலக்கியத்திற்கும் ஆய்வுகளுக்குமான களமாக இயங்கி வந்தது. பெருந்தொற்றுக்குப் பிறகான சூழலில் ஆய்வுக்கு முதன்மையளிக்கும் வகையில் மதிப்பீட்டு ஆய்விதழாக (Peer Reviewed Journal) இணையவெளியில் 2026 முதல் வெளிவருகிறது.
கல்விப்புலத்திற்குள்ளும் வெளியிலும் நிகழும் ஆய்வுகள் பல்துறைநோக்குடன் செய்யப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இயங்குபவர்களை உள்ளடக்கித் தமிழின் பல்வேறு பரிமாணங்களைக் கண்டடைந்து இதழில் தொடர்ச்சியான உரையாடல்களை முன்வைப்பது, அதுசார்ந்த களச்செயல்பாடுகளை வடிவமைப்பது என்று திட்டமிடல்கள் அமையும்.
இலக்கியம், வாழ்க்கை, கலை, வரலாறு, சமூகம் என்று வேறுவேறாக இல்லாமல் எல்லாம் இணைகிற புள்ளிகளைக் கண்டறிந்து புலங்களின் அறிவுகளை ஒருமுகப்படுத்திக் காண்பதும் இன்று நாம் அடைகின்ற நெருக்கடிகளை முதன்மைப்படுத்திய உரையாடல்களை முன்வைப்பதும் தலையாய இயக்கமாக அமையும்.
பன்மியச்சூழல் முதன்மைவாய்ந்த நீலமலையில் வாழும் ஆலுக்குறுமரின் பழங்குடி ஓவியங்கள் பல்லாயிர ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்தவை. திணைமரபின் பின்னணியிலான ஆலுக்குறுமர் ஓவியங்கள் இயற்கைச் சாந்துகளிலிருந்து வரையப் பெறுபவை. சூழல் மையத்தைக் காட்டும் தன்மையிலான ஓவியப்பின்னணியில் கோழித்துரை திரு.கணேசன் அவர்கள் மரபார்ந்த குழுநடனத்தை வரைந்துகொடுத்தார். நவீன வடிவம் தமிழி அருள்.
வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்பப் பல்வேறு புலஅறிவுகளைக் கையாள்வதும் இயற்கைச்சூழலுடன் இணக்கமான வாழ்முறைகளை முன்வைக்கக்கூடிய ஆக்கங்களை வெளியிடுதல்.
ஆய்வுசார்ந்த வெளிகளில் தவிர்க்க இயலாத ஆளுமைகளின் பங்களிப்புகளைப் பல்வேறு தளங்களில் ஆவணப்படுத்தலும் அவர்களின் பங்களிப்பு சார்ந்த உரையாடல்களை முன்வைத்தல்.
மொழி, இனம், பண்பாடு, நாடு, சூழல் என்ற எவ்வித வேறுபாடுகளின்றி உயிர்மநேயத்தால் பிணைக்கும் ஒப்பாய்வுகளையும் மொழிபெயர்ப்புகளையும் வளர்த்தெடுத்தல்.
ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமின்றி ஆய்வுநூல் மீதான மதிப்புரைகள், ஆய்வுரைகள், சமூகம், இலக்கியம், கலை சார்ந்த ஆய்வறிக்கைகள், களப்பணி அறிக்கைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வுக்குழுவினரால் தேர்வுசெய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் துறைசார்ந்த வல்லுநரால் மதிப்பீடு செய்யப்பட்டு மின்னஞ்சல் வழியாக மதிப்புரைகள் வழங்கப்படும்.
கீழே உள்ள கட்டுரைகள் புதிய பக்கத்தில் முழுமையாகத் திறக்கும்
வெட்சி ஆய்விதழ் தமிழியல் ஆய்வுக்களத்தில் எந்த நிதியுதவியுமின்றி இயங்கும் அமைப்பாகும். இக்களத்தில் ஆய்வுத்தேடலுடன் இயங்குபவர்களையும் களப்பணியாளர்களையும் உள்ளடக்கி ஆய்விதழைக் கொண்டு செல்ல விழைகிறோம்.